» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தண்டவாளத்தில் எல்லை கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி : 4 சிறுவர்கள் கைது

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:12:17 AM (IST)

தண்டவாளத்தில் எல்லை கற்களை வைத்து நெல்லை - திருச்செந்தூர் ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் இருந்து கடந்த 7-ந்தேதி மாலை 6.50 மணிக்கு திருச்செந்தூருக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்டு சென்றது. இரவில் காயல்பட்டினத்தை கடந்து வீரபாண்டியன்பட்டினம் பகுதியில் ரயில் சென்றபோது, தண்டவாளத்தில் சுமார் 5 அடி நீளமுடைய கான்கிரீட்டாலான 3 எல்லைக்கற்களை வரிசையாக படுக்க வைத்திருந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றார். எனினும் தண்டவாளத்தில் இருந்த 2 கற்களின் மீது ரயில் சக்கரங்கள் ஏறியதில் உடைந்து சிதறின. இதுகுறித்து என்ஜின் டிரைவர் ஆறுமுகநேரி ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, தண்டவாளத்தில் கிடந்த கற்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. 

என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே டிராக் செக்சன் என்ஜினீயர் ஞானசுந்தரம் (56) நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசில் புகார் செய்தார். ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், முத்தமிழ் செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, ரயிலை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

விசாரணையில், வீரபாண்டியன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 18 வயதுடைய 4 சிறுவர்கள் விளையாட்டுக்காக தண்டவாளத்தில் எல்லை கற்களை வைத்து, அவற்றின் மீது ரயில் மோதுவதை வீடியோ எடுக்க திட்டமிட்டது தெரிய வந்தது. எனவே அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

ArunFeb 10, 2025 - 01:13:26 PM | Posted IP 172.7*****

விளையாட்டு விபத்தை உருவாக்கும். பலர் பயணம் செய்யும் ரயில். எனவே இவர்களுக்கு தண்டனையாக தண்டவாளம் பராமரிப்பு பணி(3 நாள்) வழங்கி மற்றவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory