» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி? மு.வீரபாண்டியன் விளக்கம்!

செவ்வாய் 14, ஜூலை 2026 5:36:53 PM (IST)

அரசியல் தேவை ஏற்படும் பட்சத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), சிபிஎம்எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு குறித்து விளக்கமளித்தார். இக்குழு தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட தற்காலிகக் குழு அல்ல என்றும், தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காகப் போராடவும், நாட்டை இடதுசாரிகளின் கொள்கை நோக்கிய பாதையில் திருப்பவும் உருவாக்கப்பட்ட நீண்டகாலக் கொள்கைக் குழு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் காலங்களில் இடதுசாரி கட்சிகள் தத்தமது உட்கட்சிக் கூட்டங்களில் விவாதித்து, தேவைப்படும் பட்சத்தில் ஒருங்கிணைந்து முடிவுகளை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் அந்தந்த நேரத்து அரசியல் சூழலுக்கு ஏற்பவே இறுதி முடிவுகள் எடுக்கப்படும். தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயச் சூழல் உருவானால், கம்யூனிஸ்டுகளால் தனித்து நின்று போட்டியிட முடியும். கம்யூனிஸ்டுகளுக்கு நாடு தழுவிய அளவில் வலுவான கட்டமைப்பு இருப்பதோடு, மக்களின் நலனுக்கான தங்களின் பணிகளைப் பொதுமக்கள் நன்கு அறிவர். எனவே, அத்தகைய அரசியல் தேவை ஏற்படும் பட்சத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், அதனை கட்சியின் உயர்மட்டக் குழுவே இறுதி செய்யும் என்றும் மு.வீரபாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகளிடையே நடக்கும் கட்சித் தாவல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கும் குதிரை பேர நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்புடையவை அல்ல. இத்தகைய செயல்பாடுகள் நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், பல்கட்சி ஆட்சி முறைக்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்குவதோடு, பொதுமக்கள் மத்தியில் அரசியல் அமைப்பின் மீதே வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும். எனவே, அரசியல் கட்சிகள் அவரவர் கொள்கை வழியில் நின்று நேர்மையான அரசியல் செய்வதே முதன்மைக் கடமையாகும் என மு.வீரபாண்டியன் தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory