» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!

செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மைக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, ஆற்றில் மதச் சடங்குப் பொருட்களை வீசுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளைப் பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள் மற்றும் மண்டபங்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கான சடங்குகள் மற்றும் பரிகார வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நேர்வுகளின் போது பயன்படுத்தப்படும் ஆடைகள், துணிகள், செருப்புகள் மற்றும் இறந்தவர்களின் உடைமைகள் ஆற்றில் வீசப்படுவதால், குடிநீர் ஆதாரம் மாசடைந்து நீர்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டைத் தடுக்கத் தேவையான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், "மதத்தின் பெயரால் நீர்நிலைகளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை" என்றும் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆற்றில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான மதச் சடங்குகள் மற்றும் பொருட்களை வீசும் நடைமுறைகளுக்குத் தடை விதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே, ஆற்றின் கரையோரங்களில் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களைக் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, இப் பிரச்சனை தொடர்பாகப் பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள், மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை 16 அன்று நேரில் சமர்ப்பிக்கலாம் எனத் திருநெல்வேலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory