» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 51.1 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு : சபாநாயகர் அப்பாவு தகவல்

வியாழன் 4, செப்டம்பர் 2025 3:34:38 PM (IST)



பணகுடி பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பேரூராட்சி சூசையப்பர் சமுதாய நலக்கூடத்தில் இன்று (04.09.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தலைமையில் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் கிடைக்கும் வகையில் உன்னத நோக்கத்தோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சாமானிய மக்கள் இருக்கும் இடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள், ஆணைகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளிலும், நகரப்பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் சேவைகள் கிடைப்பதற்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் 255 முகாம்கள் நடத்திடுவதற்கு திட்டமிடப்பட்டு அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 07.10.2025 வரை இம்முகாம்கள் நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 154 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் 34,994 மனுக்கள் பெறப்பட்டு அதில் 17,882 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 16,181 மனுக்களுக்கு தீர்வு காணும் பணிகளில் அலுவலர்கள் ஈட்டுப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 51.1 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் துணை ஆட்சியர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் ஏதேனும் சிறு தவறுகளும் நடக்காத வண்ணம் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நான்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு நகராட்சி மற்றும் நான்குநேரி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, பேரூராட்சிகள் மற்றும் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு வள்ளியூர், திசையன்விளை, பணகுடி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு ரூ.423.13 கோடிக்கு தாமிரபரணி நதியை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெறுகிறது. பணகுடி பேரூராட்சி 12 ஆயிரம் இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது. விரைவில் அனைத்து இல்லங்களுக்கும் தாமிபரணி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகாவில் ஆலந்துரையாற்றின் குறுக்கே கஞ்சிப்பாறை அணைக்கட்டினை மேம்படுத்தும் பணி, மேல் மற்றும் கீழ்மட்ட சமமட்ட கால்வாய்களை கஞ்சிப்பாறை அணைக்கட்டிலிருந்து அனுமாநதி வரை அகலப்படுத்தும் பணிக்காக ரூ.40 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன், வட்டார மருத்துவர் கோலப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாஸ்கர், பேரூராட்சித் துணைத் தலைவர் புஷ்பராஜ், செயல் அலுவலர் மோகனரங்கன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கோபால கண்ணன், அலி, முத்துக்குமார், ஆனந்தி, பூங்கோதை, ஆஷா, இராஜலெட்சுமி, ஜானகி, மரிய ஷிமோனா, ஜெயராம், பானுப்பிரியா உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory