» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவசாயியை வெட்டிக்கொன்ற தந்தை- 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை: தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 5, பிப்ரவரி 2025 8:27:57 AM (IST)
கடையம் அருகே விவசாயியை வெட்டிக்கொன்ற வழக்கில் தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாப்பாக்குடி புது கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (54), விவசாயி. இவருடைய மனைவி உச்சி மாகாளி (51). இவரது மகன் மாரிமுத்து. இவர் திருச்சியில் உள்ள ஒரு பெயிண்ட் கம்பெனியில் வேலை பார்த்தார். இவருக்கும், பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் உமா செல்விக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேேய கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் உமா செல்வி, கணவர் வீட்டார் மீது அம்பை மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பின்னர் சுப்பையா குடும்பத்தினர் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இதனால் இரு குடும்பத்தினர் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த 14.8.2022 அன்று சுப்பையா, தனது மனைவி உச்சிமாகாளியுடன் மோட்டார் சைக்கிளில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுக்கு வந்து குளித்தனர். பின்னர் சுப்பையாவுக்கு கடையில் பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், அவர் தனது மனைவியை உறவினரான இசக்கிமுத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அதன்படி இசக்கிமுத்துவின் மோட்டார் சைக்கிளில் உச்சிமாகாளி செல்ல, அதற்கு முன்பாக சுப்பையா தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நெல்லை- கடையம் மெயின் ரோட்டில் கடையம் அடுத்த லெட்சுமிபுரம் விலக்கு அருகில் வரும்போது எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் உமா செல்வியின் அண்ணன்கள் லண்டன் துரை என்ற குட்டி (25), சுடலைமணி (26) மற்றும் அவர்களின் தந்தை மாரியப்பன் (51) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் சுப்பையாவை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாள்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதை பார்த்த உச்சிமாகாளி, இசக்கிமுத்து உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் உச்சிமாகாளி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மனோஜ் குமார் குற்றம் சாட்டப்பட்ட லண்டன் துரை என்ற குட்டி, சுடலைமணி, மாரியப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட அரசு குற்றத்துறை வக்கீல் எஸ்.வேலுச்சாமி ஆஜரானார்.