» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல முயற்சி: கோவில்பட்டி ரயில்நிலையத்தில் 4பேர் கைது
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:24:59 PM (IST)
திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல முயற்சித்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 4பேரை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் பிற்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்ற இந்து முன்னணி மாநில இணைச் செயலாளர் பொன்னையா என்பவர் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதேபோன்று போராட்டத்தில் கலந்து கொள்ள ரயில் மூலம் செல்வதற்காக கோவில்பட்டி ரயில்வே நிலையத்திற்கு வந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன், இந்து முன்னணி நகரத் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமலாதேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தனை போலீசார் கைது செய்த போது அவர்களுடன் வர மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, தரையில் படுத்து வர மறுத்தார். இதையடுத்து போலீசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்து சென்றனர். கோவில்பட்டி வழியாக மதுரை நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.