» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு பாராட்டு விழா
திங்கள் 3, பிப்ரவரி 2025 10:57:44 AM (IST)
இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக பொறுப்பேற்றுள்ள வி.நாராயணன் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வார் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா புகழாராம் சூட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மேலகாட்டுவிளையில் இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக பொறுப்பேற்றுள்ள வி.நாராயணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு புத்தகம் வழங்கி பேசுகையில்- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக பொறுப்பெற்றுள்ள வி.நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்த நம் மண்ணின் விஞ்ஞானி ஆவார்கள்.
விஞ்ஞானி டாக்டர் வி.நாராயணன் தனது பள்ளி படிப்பை கீழகாட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலை படிப்பினை ஆதிக்காட்டுவிளை ஊராட்சியில் உள்ள சியோன்புரம் சி.எஸ்.ஐ எல்எம்எஸ் பள்ளியிலும் படித்து முடித்தார்கள். தொடர்ந்து நாகர்கோவில், கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்த அவர், கரக்பூர் ஐஐடியில் கிரயோஜெனிக் இன்ஜினியரிங் பிரிவில் எம்.டெக் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பி.எச்டி முடித்துள்ளார். 1984ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உடன் இணைந்து பணியாற்றினார். ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விஞ்ஞானி மாதவன் நாயர், விஞ்ஞானி சிவன் ஆகியோர் இஸ்ரோ தலைவராக பதவி வகித்திருந்தனர்.
மூன்றாவதாக தற்போது விஞ்ஞானி வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஞ்ஞானி வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக கடந்த 15.01.2025 அன்று பொறுப்பேற்றார்கள். பொறுப்பேற்ற உடன் தலைமையில் ஜிஎஸ்எல்வி-எப் 15 என்ற இஸ்ரோவின் 100 வது ராக்கெட்டை வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த 29.01.2025 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார்கள்.
மேலும் அப்துல்கலாம் அய்யாவுக்கு அடுத்து தமிழ்நாட்டை சார்ந்த நம்மண்ணை சார்ந்த விஞ்ஞானி விண்வெளி துறையில் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து விஞ்ஞானி நாராயணன் அவர்களுடைய வாழ்கை பயண வீடியோ திரையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒளிப்பரப்ப செய்து, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விஞ்ஞானி வி.நாராயணன் முன்மாதிரியாக திகழ்வார்கள். தொடர்ந்து அவர்களுடைய பணி சிறக்க மனதார வாழ்த்துக்கிறேன் என ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முன்னாள் மத்திய மாநில அமைச்சர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.