» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சனி 24, மே 2025 4:44:41 PM (IST)

மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு அளிக்க வேண்டும்' என்று பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். 

புது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகிய இரண்டு பேர் கூட்டத்தை புறக்கணித்தனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தது குறித்து சமூக வலைதளத்தில் முதல் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வரி வருவாயில் 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு அளிக்க வேண்டும்.

P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, 2024-2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள். நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.

சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory