» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாயமான 5 வயது சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு: கிணற்றில் வீசிக்கொலை செய்த பெண் கைது!

செவ்வாய் 30, ஜூன் 2026 8:39:41 AM (IST)

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி கிணற்றில் வீசிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அச்சிறுமியின் உறவினரான சபரிகா என்பவரை நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மதுரை பைகாரா முத்துராமலிங்கபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலகணேஷ் (32). இவருடைய மனைவி கார்த்திகைச்செல்வி (28). இவர்களுக்குச் சாய் தீப்தி, சாரு நித்திகா என்ற 5 வயது இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திகைச்செல்வி தனது மகள்களுடன் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரில் உள்ள தந்தை முத்துமுருகன் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி சாய் தீப்தி திடீரென மாயமானார். தேடுதலுக்குப் பின், அருகில் உள்ள உறை கிணற்றில் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார்.

ராமநாதபுரம் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்திகைச்செல்வியின் தம்பி அஜித்குமாரின் மனைவி சபரிகா (22) என்பவருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சபரிகா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "காதல் திருமணம் செய்துகொண்ட தனக்கும் கணவர் குடும்பத்தினருக்கும் இடையே சுமுக உறவு இருக்கவில்லை என்றும், தனது 11 மாதக் குழந்தை மாற்றுத்திறனாளியாகப் பிறந்ததால் குடும்பத்தினரின் புறக்கணிப்பு அதிகரித்ததாகவும்" தெரிவித்துள்ளார். மேலும், கார்த்திகைச்செல்வியின் குழந்தைகளுக்குக் காதணி விழா நடத்தத் தனது நகைகளைக் கேட்டதாலும், குடும்பத்தினர் அக்குழந்தைகளை மட்டும் கவனித்து வந்ததாலும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இக்கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் தூங்கிய நேரத்தில் சிறுமியைத் தூக்கிச் சென்று வீட்டின் பின்புறமிருந்த உறை கிணற்றுக்குள் வீசிக் கொன்றதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சபரிகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory