» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடுக்கடலில் தத்தளித்த மாலத்தீவு சரக்குக் கப்பல்: கடலோரக் காவல் படை விரைந்து மீட்பு!

செவ்வாய் 30, ஜூன் 2026 8:21:22 AM (IST)



திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் சென்றபோது மாலத்தீவு சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பழுதைக் கடலோரக் காவல் படையினர் துரிதமாகச் செயல்பட்டுக் கட்டுப்படுத்தி, கப்பலையும் அதன் பணியாளர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி ‘எம்.வி.சித்தா’ என்ற சிறிய வகை சரக்குக் கப்பல் புறப்பட்டுச் சென்றது. இக்கப்பலில் கார்கள், ஈச்ச மரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. இக்கப்பல் திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் சென்றபோது, பலத்த காற்று காரணமாகக் கப்பலில் இருந்த பொருட்களை மூடி வைத்திருந்த தார்ப்பாய் காற்றில் பறந்துபோனது. அதே நேரத்தில், கப்பலின் கீழ் பகுதியில் சில இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் கப்பலுக்குள் நுழையத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து கப்பலின் கேப்டன், அவசர உதவி கோரி தூத்துக்குடி கடலோரக் காவல் படைக்குத் தகவல் அனுப்பினார். உடனடியாகத் தூத்துக்குடி கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பலான ‘அதுல்யா’ சம்பவ இடத்திற்கு விரைந்தது. கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சிறப்புக் குழு மற்றும் மீட்பு நிபுணர்கள் கப்பலில் ஏறி அவசரப் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் சரக்குக் கப்பலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியும் உடனடியாகத் தொடங்கப்பட்டதால், கப்பலுக்குள் நீர் புகுவது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் கப்பலில் முழுமையான பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தச் சரக்குக் கப்பல் மீண்டும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குப் பத்திரமாகக் கொண்டு வரப்பட்டது. 

அங்கு கப்பலில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கப்பலில் ஏற்பட்ட ஓட்டை மேலும் விரிசலடைவதற்குள் கண்டுபிடிக்கப்பட்டதாலும், கடலோரக் காவல் படையினர் விரைந்து செயல்பட்டதாலும் கப்பல் மூழ்கும் அபாயம் தவிர்க்கப்பட்டு, பணியாளர்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory