» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்து முடக்கம் நீக்கத்திற்கு எதிரான வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 30, ஜூன் 2026 8:33:32 AM (IST)

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் முடக்கப்பட்ட 17 சொத்துகளை விடுவித்ததை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், அவர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில், மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவருக்குச் சொந்தமான 18 சொத்துகளை முடக்கியது. இதை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், ஒரே ஒரு சொத்தைத் தவிர, மீதமுள்ள 17 சொத்துகளின் முடக்கத்தை நீக்கி, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், 17 சொத்துகளின் முடக்கத்தை நீக்கியதற்கான சரியான காரணத்தை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் குறிப்பிடவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்து என அடையாளம் காணப்பட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது" என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை, முடக்கம் நீக்கம் செய்யப்பட்ட 17 சொத்துகளைப் பொறுத்தமட்டில் தற்போதைய நிலையே (Status Quo) நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory