» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொத்து முடக்கம் நீக்கத்திற்கு எதிரான வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:33:32 AM (IST)
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் முடக்கப்பட்ட 17 சொத்துகளை விடுவித்ததை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், அவர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கின் அடிப்படையில், மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவருக்குச் சொந்தமான 18 சொத்துகளை முடக்கியது. இதை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், ஒரே ஒரு சொத்தைத் தவிர, மீதமுள்ள 17 சொத்துகளின் முடக்கத்தை நீக்கி, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், 17 சொத்துகளின் முடக்கத்தை நீக்கியதற்கான சரியான காரணத்தை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் குறிப்பிடவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்து என அடையாளம் காணப்பட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது" என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை, முடக்கம் நீக்கம் செய்யப்பட்ட 17 சொத்துகளைப் பொறுத்தமட்டில் தற்போதைய நிலையே (Status Quo) நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு : தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 30, ஜூன் 2026 10:30:31 AM (IST)

தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று: 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 10:24:04 AM (IST)

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

மாயமான 5 வயது சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு: கிணற்றில் வீசிக்கொலை செய்த பெண் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:39:41 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:37:32 AM (IST)

நடுக்கடலில் தத்தளித்த மாலத்தீவு சரக்குக் கப்பல்: கடலோரக் காவல் படை விரைந்து மீட்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:21:22 AM (IST)


