» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலைப் பணிகளில் ரூ.3.23 கோடி மோசடி : எ.வ.வேலு வீடு உட்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வியாழன் 25, ஜூன் 2026 5:19:51 PM (IST)

நெடுஞ்சாலைத் துறையில் பணிகள் எதையும் மேற்கொள்ளாமலேயே போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.23 கோடி அரசுப் பணத்தை மோசடி செய்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உட்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் கடந்துள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுவின் இல்லம் உள்ளிட்ட மொத்தம் 13 இடங்களில் 35 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று தீவிர சோதனையைத் தொடங்கியுள்ளனர்.

மாநில நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கும், சீரமைப்பதற்கும் ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் பெரும் ஊழலும், முறைகேடும் நடந்துள்ளதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, வாரணாசி-கன்னியாகுமரி சாலை மேம்பாடு, மன்மங்கலம் மற்றும் நன்னியூர் சாலை மேம்பாடு, நெரூர்-தளவாபாளையம் சாலை மற்றும் கரூர் விரியம்பட்டி சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக மொத்தம் ரூ.4.9 கோடி நிதி அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த 4 சாலைகளிலும் எந்தவொரு பராமரிப்பு அல்லது மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், பணிகள் நடந்ததாகக் காட்டி அனுமதிக்கப்பட்ட தொகையில் 77 விழுக்காடு, அதாவது ரூ.3.23 கோடி பணம் இரண்டு தவணைகளாக ஒப்பந்ததாரருக்கு முறைகேடாகச் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சஸ்பெண்ட்

பொதுப் பணத்தை மோசடியாகப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர் நியாயமற்ற முறையில் ஆதாயமடைய அரசு அதிகாரிகள் தங்களது கடமையை நேர்மையற்ற முறையில் நிறைவேற்றியுள்ளனர் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 4 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தற்போதைய சோதனையில் வழக்குக்குத் தேவையான மிக முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நேர்மையான முறையில் தொடரும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory