» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலி காப்பீடு தயாரித்து மோசடி: 5 பேர் கைது - தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி

செவ்வாய் 10, மார்ச் 2026 11:49:29 AM (IST)



போலி காப்பீடு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 20.02.2024 அன்று நடந்த சாலை விபத்து தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்தபோது, ஒரு மிகப்பெரிய காப்பீடு மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பால்பாண்டி என்பவர், தனக்கு விபத்து ஏற்படுத்திய டாட்டா மோட்டார்ஸ் வாகனத்திற்கு இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த வாகனத்திற்கு HDFC ERGO பொது காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அந்த காப்பீடு சான்றிதழ் போலியானது என்பதை HDFC ERGO நிறுவனத்தின் மேலாளர் ராஜேஷ் கண்டறிந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மணியாச்சி காவல் நிலையத்தில் மோசடி வழக்கு  பதிவு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் மற்றும் தலைவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலில் தனிப்படை அமைக்கப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான புலனாய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், இக்கும்பல் இணையதளம் மூலம் நான்கு சக்கர வாகனங்களின் எண்களைப் பயன்படுத்தி, அவற்றுக்கு இரண்டு சக்கர வாகனத்திற்கான குறைந்த கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். பின்னர், கணினி மூலம் வாகனத்தின் பெயர், வகை மற்றும் உரிமையாளர் முகவரி ஆகியவற்றை மாற்றி, போலியான 'ஒரிஜினல்' காப்பீடு பாலிசிகளை உருவாக்கியுள்ளனர். 2020-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி காப்பீடு பாலிசிகளை வழங்கி மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடி வழக்கில் தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் சங்கரலிங்கம், தென்காசி மாவட்டம் கழுநீர்குளத்தைச் சேர்ந்த பகவதி பாண்டியன் மகன் தங்கராஜ், திருநெல்வேலி மாவட்டம் இத்திகுளத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் தங்கப்பாண்டி, மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பாலமுருகன், செந்தூர் பாண்டி செந்தில்வேல் முருகன் ஆகிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் சங்கரலிங்கம் என்பவர் பிஇ படித்துள்ளார், சோழா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற போலி காப்பீடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory