» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!

வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)



நெல்லை மாவட்டம் காரியாண்டிலுள்ள கருமேனியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில், நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் காரியாண்டிலுள்ள கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அவர் தெரிவித்ததாவது "தென்னகத்தின் வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி நதி திகழ்ந்து வருகிறது. 

இது மேற்குத் தொடர்ச்சி மலையினில் உதயமாகி 120 கி.மீ திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியாக பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டத்தின் புன்னக்காயல் கிராமத்தின் வழியாக இறுதியாக வங்காள விரிகுடா கடலில் இணைகிறது. இவ்வாறு பயணிக்கும் தாமிரபரணி நதியில் உபரியாக ஆண்டுதோறு சராசரியாக 10758 மி. கன அடி நீரானது தாமிரபரணி நதியின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் வழியாக கடலில் கலப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விரையமாகும் நதிநீரினை பயன்படுத்த தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரால் சட்டமன்றப் பேரவையில் 20.03.2008 அன்று அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.1060.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.

இத்திட்டமானது தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்பட்ட முதல் நதிநீர் இணைப்பு திட்டமாகும். இத்திட்டமானது தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூன்றாவது அணைக்கட்டான கன்னடியன் அணைக்கட்டிலிருந்து செல்லும் கன்னடியன் கால்வாயின் 6.50 கி.மீட்டரிலிருந்து 75.175 கி.மீ வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் எம்.எல்.தேரி சென்றடைகிறது.

இத்திட்டத்திற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 904.49 ஹெக்டேர் பட்டா நிலமும், 144.32 ஹெக்டேர் புறம்போக்கு நிலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 157.42 ஹெக்டேர் பட்டா நிலமும், 4.80 ஹெக்டேர் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்தின் 5 கிராமங்களும், நாங்குநேரி வட்டத்தின் 17 கிராமங்களும், இராதாபுரம் வட்டத்தின் 10 கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தின் 16 கிராமங்களும், திருச்செந்தூர் வட்டத்தின் 2 கிராமங்களும் பயன்பெறுகின்றது.

மேலும், இத்திட்டத்தின் மூலம் 6038 ஹெக்டேர் விளைநிலங்கள் நிலைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 84.98 ஹெக்டேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 855.02 ஹெக்டேர் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 40 ஹெக்டேர் நிலங்கள் பாசன உறுதி பெறும். புதிதாக 17002 ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இன்று 1600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கருமேனியாறுக்கு 390 கனஅடியும், வெள்ளக்கால்வாய் 690 கனஅடியும் (சுபிசேசபுரம்-255 கன அடி, எம்.எல்.தேதி 435 கனஅடி), திணையூரணி 20 கன அடியும், விஜயநாராயணம், நம்பியாறு அணை 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. மழை மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிடப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், கண்காணிப்பு பொறியாளர்கள் (திட்டங்கள்) திருமலைக்குமார், சிவக்குமார், களக்காடு நகர்மன்ற துணைத்தலைவர் பி.சி.ராஜன், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆராக்கிய எட்வின், செயற்பொறியாளர்கள் ஆக்னஸ்ராணி, அருள்பன்னீர்செல்வம், தனலெட்சுமி, உதவி செயற்பொறியாளர் இளங்கோ, இளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இஸ்ரவேல், உதவி பொறியாளர் யாசர் அராபத், உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory