» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. ஆட்சியில் பள்ளிகள் கொலைவெறி கூடாரமாக மாறி நிற்கிறது: சீமான் குற்றச்சாட்டு!

புதன் 16, ஏப்ரல் 2025 4:17:23 PM (IST)

தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கூடங்கள், கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறும் கூடாரமாக மாறி நிற்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோடு, தடுக்க வந்த ஆசிரியரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள், கத்தி போன்ற கொடூர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வரும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் சட்டமும், சமூகமும் சீர்கெட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான புகார்களும், பள்ளி மாணவ-மாணவியர் மது அருந்தும் காணொளிகளும், மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல் செய்திகளும் வராத நாட்களே இல்லை என்ற அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. அறிவைச் செறிவாக்கி, நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் கற்பித்து நல்லதொரு தலைமுறையை வளர்த்தெடுத்து நாட்டிற்கு அளிக்கும் பெரும்பணி புரியும் பள்ளிக்கூடங்கள், தி.மு.க. ஆட்சியில் மது போதை விற்பனையகங்களாகவும் சாதிய மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறும் கூடாரமாகவும் மாறி நிற்பதுதான் ஏற்கவே முடியாத காலக்கொடுமையாகும்.

சட்டம்-ஒழுங்கைக் கட்டி காக்க திறனற்ற தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்த சமூகமும் குற்றச்சமூகமாகச் சீர்கெட்டு நிற்பதன் சமகாலச் சான்றுகளில் ஒன்றுதான் தற்போது பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் மற்றும் ஆசிரியர் மீது நடைபெற்றுள்ள கொலைவெறித் தாக்குதலாகும். தீய திராவிட மாடல் ஆட்சியை அகற்றுவது ஒன்றே நாட்டில் நாள்தோறும் நடைபெறும் கொடுமைகள் அனைத்தையும் தடுப்பதற்கான சரியான தீர்வாகும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory