» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் அருகே அந்தியோதயா ரயில் மீது கல்வீச்சு: வடமாநில வாலிபர் கைது

திங்கள் 5, ஜனவரி 2026 8:32:13 AM (IST)

நாகர்கோவில் அருகே அந்தியோதயா ரயில் மீது கல்வீசிய வடமாநில வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு தினமும் அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த 2-ந் தேதி மதியம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காவல்கிணறை தாண்டி சென்றது.அப்போது திடீரென ரயில் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து இருக்கையில் அமர்ந்திருந்த கல்குளம் பகுதியைச் சேர்ந்த ரீனா அன்னமேரி (67) என்பவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த பகுதியில் ரயில்வே இன்ஸ்பெக்டர்கள் அருள் ஜெயபால், சுரேஷ் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமியை பிடிக்க ரயில்வே இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி, அதில் அந்த வழியாக சென்றவர்கள் யாரென்று விசாரித்தனர். அந்த வகையில் வடமாநில வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம் கலந்தி மாவட்டம் பலாபறசீயாதா பகுதியைச் சேர்ந்த பாபுரா பரயோ (19) என்பது தெரிய வந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் வேலைக்கு செல்லும்போது ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம். இல்லாவிட்டால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் ஹாலோ பிளாக் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்.

சம்பவத்தன்று பாபுரா பரயோ அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு வந்த போது திடீரென ரயில் வந்துள்ளது. உடனே அவர் போதையில் தண்டவாளத்தில் கிடந்த கல்லை எடுத்து வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory