» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள்: ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மரியாதை!

புதன் 12, ஜூன் 2024 11:34:51 AM (IST)



குமரி தந்தை மார்ஷல் நேசமணி 130-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்

கன்னியாகுமரி மாவட்டம், குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின், 130-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நாகர்கோவில் மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆகியோர் முன்னிலையில் இன்று (12.06.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- குமரி தந்தை மார்ஷல் நேசமணி 1895 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் பள்ளியாடி அருகேயுள்ள நட்டாலம் ஊராட்சிக்குட்பட்ட நேசர்புரம் எனும் கிராமத்தில் அப்பல்லோஸ், ஞானம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது ஆரம்பப்பள்ளிப்படிப்பை பள்ளியாடி மற்றும் மார்த்தாண்டத்திலும், உயர்நிலைக் கல்வியை ஸ்காட் கிறிஸ்தவப் பள்ளியிலும் முடித்தார். எம்.ஏ படிப்பை நெல்லை சி.எம்.எஸ் கல்லூரியில் தொடர்ந்தார். 

பின்னர், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பயின்று பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றார். சமூக பணியாற்றுவதற்குரிய இடம் கல்விக்கூடம் என்பதை உணர்ந்த நேசமணி , கேரளாவிலுள்ள கர்நூல், பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தார். அவர் பணிபுரியும் காலத்தில் கல்வி என்றால் என்ன என்பதே தெரியாத, வறுமையில் வாடிய, சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட, மாணவ, மாணவியர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களது பெற்றோரை அணுகி, அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு வேண்டினார். குறிப்பாக, தலித் மக்களின் கல்வி உயர்வுக்காகப் பெரிதும் பாடுபட்டார். இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார்.

1921-ஆம் ஆண்டில் நேசமணி தமது வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். 1923-ஆம் ஆண்டிலிருந்து காலரா, வைசூரி போன்ற நோய்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதும் பரவி, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நேசமணி பல்வேறு தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைத்திட ஏற்பாடு செய்தார். இதனால் அவரது புகழ் திருவிதாங்கூர் முழுவதும் பரவியது.

பனை மற்றும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை, அவர்களது நலனுக்காக போராடி வெற்றி பெற்றார். தமிழ்ப்பகுதிகள் தனி ஜில்லாவாக அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முழங்கினார். 1956-ஆம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி முதல், தமிழகப் பகுதிகள் தங்கள் உரிமையை நிலைநிறுத்தியதோடு, தமிழகப் பகுதிகள் அனைத்தும் தாய்த் தமிழகத்துடன் இணைந்து, அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டம் தோன்றியதற்கு, முழு முதல் காரணமாக அமைந்தவர் மார்ஷல் நேசமணி .

குமரி தந்தை,கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி, ‘மார்ஷல்" என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர். குறிப்பாக ‘பெரியவர்" என பெரியவர்களால் போற்றப்படும் பெருமைமிக்க தலைவர், நீதிக்காக போராடிய நெஞ்சுரமிக்க தலைவர், நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர், தன்னலம் கருதாத தியாகச் செம்மல், அன்பே உருவான அரும் பெருந்தலைவர், தந்தைக்குத் தந்தையாய் - தலைவனுக்கு தலைவனாய் இருந்து வழிகாட்டியாய் வாழ்ந்து வான்புகழ் கொண்ட மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மார்ஷல் நேசமணி அவர்களின் மகன்வழி பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட்சுஷ்மா, மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிஸ்சன், மாநகராட்சி உறுப்பினர்கள் விஜிலா ஜஸ்டஸ், மேரி ஜனட் விஜிலா, அமலசெல்வன், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரவணன், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory