» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சனி 4, ஏப்ரல் 2026 5:16:41 PM (IST)



தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்," என  நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக தென் மாவட்டங்களுக்கு வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், மீனவர் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

நேற்று நெல்லை மற்றும் பாளையங்கோட்டையில் பிரசாரம் செய்த முதல்வர், இன்று காலை கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவ மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: "திமுக அரசு எப்போதும் மீனவர்களின் உற்ற தோழனாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், வெளியுறவுக் கொள்கையைத் தன் வசம் வைத்துள்ள மத்திய பாஜக அரசு, கடல் கடந்து மீன்பிடிக்கச் செல்லும் நம் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. சிறிய அண்டை நாடுகளிடம் கூட இந்தியாவுக்குச் செல்வாக்கு இல்லாத நிலையைப் பிரதமர் மோடி உருவாக்கிவிட்டார். தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாகப் பார்க்க பாஜாக அரசு மறுப்பதே இந்த அவலநிலைக்குக் காரணம்."

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நரேந்திர மோடி பேசியதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், "அன்று மன்மோகன் சிங் அவர்களைப் 'பலவீனமான பிரதமர்' என்று விமர்சித்த மோடி, தான் பிரதமராக வந்தால் மீனவர்கள் மீதான தாக்குதல் நடக்காது என்று கூறினார். ஆனால், இன்றும் இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது சொல்லுங்கள் மோடி அவர்களே, நீங்கள் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை ஒப்புக்கொள்வீர்களா மாட்டீர்களா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

பதில் கிடைக்காத கேள்விகள்:

தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிமைகள் குறித்துப் பிரதமர் மோடியிடம் தன்னிடம் பல கேள்விகள் உள்ளதாகப் பட்டியலிட்ட முதல்வர்:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதம்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்.

ஓசூர் விமான நிலையம் மற்றும் புதிய ரயில்வே திட்டங்கள்.

பேரிடர் நிவாரண நிதி மற்றும் கல்வி நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி.

தொகுதி மறுவரையறையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் வழங்கப்படுமா?



"இப்படி நான் தொடர்ச்சியாகக் கேட்கும் எந்தக் கேள்விக்கும் இதுவரை பிரதமரிடமிருந்து பதில் இல்லை. தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்," என மு.க. ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory