» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!

ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

VanAccidentKutral.jpg

கடையத்தில் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி கரட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 25 பேர் வேன் மூலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்குச் சுற்றுலா வந்திருந்தனர். அங்கு அறை எடுத்துத் தங்கி அருவிகளில் குளித்த பின், குழுவிலிருந்து 11 பயணிகள் மட்டும் வேனில் பாபநாசத்திற்குப் புறப்பட்டனர். வாகனத்தைக் கொடுமுடி தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சக்திவேல் ஓட்டினார்.

வேன் கடையம் அய்யம்பிள்ளைக்குளம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து தொடர்பான தகவலறிந்த கடையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் அப்பகுதிப் பொதுமக்களும் இணைந்து வேனில் படுகாயமடைந்தவர்களை மீட்டனர். 

வாகனத்தின் கீழ் பயணி ஒருவர் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாகப் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு வேன் தூக்கி நகர்த்தப்பட்டபோது, வாகனத்தின் கீழ் சிக்கியிருந்த பயணி தலை நசுங்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தவர் ஈரோடு மேட்டுக்கடை வேப்பமலை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன் என்பது தெரியவந்தது.

இவ்விபத்தில் கரட்டாம்பாளையத்தைச் சேர்ந்த சாந்தகுமார், மதுபாலன், கீர்த்தி குமார், மனோகரன், மகேஷ், கொடுமுடியைச் சேர்ந்த உதயகுமார், ராஜேஷ்குமார், கிருபாகரன் உள்ளிட்ட 10 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாகக் கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory