» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு

சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)

கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் கோயில் நிலங்களில் சட்டப்பூர்வமாக ரயத்துவாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையைச் சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம் என அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இப் பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் திருக்கோயில் சொத்துகள் அல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இ நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963) இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டுத் தகுதியுடையவர்களுக்கு ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இப்பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களைச் சாகுபடி செய்து சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் இப் பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்துப் பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப்பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

சட்டப்படி ஏற்கனவே ரயத்துவாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதாகத் தவெக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனை வரவேற்க வேண்டியதே தவிர, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாகச் சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் என அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான திருக்கோயில் சொத்துகள் எதுவும் சட்டவிரோதமாகத் தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையைப் பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும். இ நடவடிக்கை ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை என்பதால் தமிழக அரசின் இச் செயல்பாட்டை ஆதரிப்பதாகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory