» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக தோற்கவில்லை, வெற்றி வாய்ப்பைத்தான் இழந்தது - 'ஜென்-சி' கலந்துரையாடலில் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 29, ஜூன் 2026 10:38:12 AM (IST)

நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோற்கவில்லை என்றும், வெறும் வெற்றி வாய்ப்பைத்தான் இழந்துள்ளோம் என்றும் 'ஜென்-சி மீட்அப்' நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் எதிர்கால அரசியல் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்த 'ஜென்-சி திமுக மீட்அப்' (Gen-Z DMK Meetup) இளைஞர் கலந்துரையாடல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி போல்பெட்டை மைதானத்தில் சங்கரநாராயணன், வசந்த் மதன், டேனியல் ரூபன், சாம் டினோ, உமாராணி ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சஞ்சய் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொள்கையோடு போட்டியிட்டு மக்களைச் சந்தித்தோம். இந்தத் தேர்தலில் திமுக தோற்கவில்லை, தற்காலிகமாக வெற்றி வாய்ப்பை மட்டுமே இழந்துள்ளோம். நாம் மீண்டும் வென்று வருவோம். மு.க.ஸ்டாலின் வழியில் பணியாற்றும் நாம் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். வெறும் 17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். நம்மீது மக்கள் இன்னும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளும், 1949 இல் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, கலைஞர் வழியில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களுமே ஆகும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்தது. பெரியாரின் கொள்கைகளைச் சட்டமாக்கியதுடன், எல்லோர் நலனும் முக்கியம் என்ற அடிப்படையில் தான் திமுக இன்று வரை தடம் மாறாமல் இயங்கி வருகிறது. அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்தித்து, எல்லா சமுதாயத்தையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரே தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். இனி வரும் எதிர்காலத் தலைமுறையினர் கொள்கைப் பிடிப்போடு திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், தற்போதைய விஜய் ஆட்சியின் 'ரீல்ஸ் மாடல்' உத்திகளையும், ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கேள்வி-பதில் வடிவில் இளைஞர்கள் விளக்கினர். மேலும், முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சிகளில் எந்தெந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பது குறித்த விவாதமும், இசை நாற்காலி மற்றும் பந்து விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களிடம், தற்போதைய முதல்வர் விஜய்யைச் சுட்டிக்காட்டும் விதமாக, "தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்ற டிபன் பாக்ஸ் வேண்டுமா அல்லது பிறந்த நாளன்று வெட்டப்பட்ட கேக் வேண்டுமா?" என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்குப் போட்டியாளர்கள் "இரண்டும் தேவையில்லை" எனக் கூறி, 'கருப்பு சிவப்பு' என்ற புத்தகத்தைப் பரிசாகப் பெற்றுக் கொண்டனர். பங்கேற்ற பலர் அங்கிருந்த கரும்பலகையில் தங்களது கருத்துக்களை எழுதி கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாநிலப் பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர் மற்றும் வட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: திமுகவினர் தயாராக இருக்க ஸ்டாலின் அழைப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 12:06:34 PM (IST)

அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி: கரூர் எம்எல்ஏ பதவியை செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!
திங்கள் 29, ஜூன் 2026 11:30:20 AM (IST)

நயினார் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி விண்ணப்ப ஆதாரம் என்னிடம் உள்ளது: செங்கோட்டையன்
திங்கள் 29, ஜூன் 2026 8:52:04 AM (IST)

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

திருச்செந்தூர் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!
திங்கள் 29, ஜூன் 2026 8:42:53 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: 1.13 லட்சம் குழந்தைகளுக்குச் விநியோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:36:14 AM (IST)


