» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!

திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் கணவன், மனைவி உள்பட மூன்று பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பரமசிவன் (40). இவர் அப்பகுதியில் உள்ள மங்காபுரம் இந்து நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிதுரை மகன் பரமசிவன் (44). இவர்கள் இருவரும் தங்களது உறவினர்களான கல்லூரி மாணவிகளை அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்காக, சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக நேற்று ஆசிரியர் பரமசிவன் தனது இருசக்கர வாகனத்தில் உறவினரான முருகனின் மகள் செல்வபாரதி (20) என்ற கல்லூரி மாணவியை அழைத்துக்கொண்டு சங்கரன்கோவிலுக்குப் புறப்பட்டார். அதேபோன்று தொழிலாளி பரமசிவன் மற்றொரு பைக்கில் தனது மனைவி பொன்கிளி (42) மற்றும் உறவினரான கோவிந்தன் மகள் சந்தியா (20) ஆகியோரை அழைத்துக்கொண்டு பின்னால் சென்றுள்ளார். இரண்டு வாகனங்களும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன.

சங்கரன்கோவில் அருகே பருவக்குடி முக்கு ரோடு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனங்களின் மீதும் நேருக்கு நேர் அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேரையும் அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகச் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி ஆசிரியர் பரமசிவன் மற்றும் மாணவி செல்வபாரதி ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொழிலாளி பரமசிவன், அவரது மனைவி பொன்கிளி, மாணவி சந்தியா ஆகிய மூன்று பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துக் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் வடுகபட்டியைச் சேர்ந்த முத்துராமன் மகன் கணேசன் (35) என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory