» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!

செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)

சர்வதேச அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டுச் சுங்கக் கட்டண உயர்வு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, மத்திய அரசுடன் பேசி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் படைகள் ஈரான் மீது கூட்டாக நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியக் கச்சா எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன் நேரடித் தாக்கமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணங்களும் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் வாகனக் காப்பீடு, உதிரி பாகங்கள், டயர் விலை, ஓட்டுநர்களின் ஊதியம் மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் என அனைத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

தமிழகத்தில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகின்றன. மாநிலத்திற்குள் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள் எனப் பெரும்பாலானவற்றின் போக்குவரத்து லாரிகளைச் சார்ந்தே உள்ளது. தற்போதைய செலவினங்கள் உயர்வால் லாரி வாடகை 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இதன் தாக்கம் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கணிசமாக உயர்த்தியுள்ளதால், சாமானிய மக்களின் மாதாந்திர குடும்பச் செலவு அதிகரித்துள்ளது. மேலும், மூலப்பொருட்களின் விலை உயர்வால் வீடு கட்டும் செலவும், விவசாயிகள் கொண்டு செல்லும் உரம், விதை மற்றும் விளைபொருட்களின் போக்குவரத்துக் கட்டணமும் உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வால் சிறு வியாபாரிகளின் லாப விகிதமும் பெருமளவு குறைந்துள்ளது.

எனவே, நிலவரத்தின் தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு மத்திய அரசிடம் உடனடியாகப் பேசி, தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகள், உர விலை உயர்வு மற்றும் லாரி வாடகை உயர்வால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மாதம் ஒன்றுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory