» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகப் போராட்டம்: புரட்சிப் படை இயக்கம் எச்சரிக்கை!

செவ்வாய் 16, ஜூன் 2026 3:42:40 PM (IST)



கோட்டக்குப்பம் கிராமத்தில் மீனவ மக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையில், மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சென்று மக்களைச் சந்திக்காவிட்டால் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என மீனவப் பெண்கள் புரட்சிப் படை இயக்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மீனவப் பெண்கள் புரட்சிப் படை இயக்கத்தின் பிரதிநிதிகளான டிலைட்டா மற்றும் பெண்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.  அப்போது அவர்கள் கூறுகையில், "விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிராமத்தில் மீனவ மக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. 

இந்தச் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னியரசு, இருதரப்புப் பிரச்சினைகளையும் முழுமையாகக் கேட்காமல், தலித் மக்களை மட்டும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றி வைத்துள்ளார். இதனால் அங்குள்ள மீனவ மக்களுக்கு இன்று வரை முறையான நியாயம் கிடைக்கவில்லை.

கடல் எங்கு உள்ளதோ, அந்தப் பகுதியில் மட்டும்தான் மீனவர்களால் தங்களின் பைபர் படகுகளை நிறுத்த முடியும். வேறு இடங்களில் நிறுத்தினால் தொழில் செய்ய முடியாது என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். ஆனால், தற்போது அங்கு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீனவர்களின் பைபர் படகுகள் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்த மீனவப் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் ஏராளமான மீனவ மக்கள் பயணித்து வருகிறார்கள். எனவே, விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில் தலையிட்டு இருதரப்புப் பிரச்சினையையும் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும்; மீனவ மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். ஆளும் அரசு தொடர்ந்து மீனவ மக்களை ஒடுக்கி வருகிறது. தமிழக முதல்வர் விஜய் இந்த மீனவ மக்களின் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்.

இவ்வளவு பெரிய பிரச்சினை நடந்தும், இதுவரை மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று என்ன பிரச்சினை என்று மக்களைப் பார்க்கவில்லை. ஆளும் வர்க்கமும், ஆளும் கட்சியும் மீனவ மக்களைத் தொடர்ந்து ஒதுக்கி வருகிறது. எங்களுக்கு விடிவு தராத இவர்களுக்கா வாக்களித்தோம் என்ற நிலைமை தற்போது மீனவ மக்களிடையே உருவாகியுள்ளது.

இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால், மீனவ மக்களைச் சந்திக்கத் தவறிய மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்," என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory