» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுபோதையில் பெற்ற தாயைக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன்: தூத்துக்குடியில் கொடூரம்

வியாழன் 11, ஜூன் 2026 7:40:56 AM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் பெற்ற தாயைத் தலையில் மரக்கட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகனைப் போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் எல்லைக்குட்பட்ட குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமீலா மேரி (46). இவருடைய கணவர் சுதாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், ஜமீலா மேரி தனது மகன் இமானுவேலுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இமானுவேலுக்குக் மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜமீலா மேரி ஏற்கனவே நேரிட்ட ஒரு சாலை விபத்தின் காரணமாக, உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மதுபோதைக்கு அடிமையான இமானுவேல், கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை தலைக்கேறிய நிலையில், உடல்நிலை குன்றியிருந்த தனது தாய் ஜமீலா மேரியைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். அத்துடன் நிற்காமல், அவரை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியே தள்ளியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அப்பகுதிப் பொதுமக்கள், இமானுவேலின் இந்த மனிதநேயமற்ற செயலைக் கடுமையாகக் கண்டித்து எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் இமானுவேல் மீண்டும் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், தாய் ஜமீலா மேரிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற இமானுவேல், வீட்டில் இருந்த ஒரு மரக்கட்டையை எடுத்து, படுக்கையில் இருந்த தாய் என்றும் பாராமல் ஜமீலா மேரியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். 

இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜமீலா மேரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்ட இமானுவேல், உடனடியாகத் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இக்கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் பிரிவினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜமீலா மேரியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தாளமுத்து நகர் போலீசார் குற்றவியல் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மேலும், தாயைக் கொன்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடித் தலைமறைவாக உள்ள இமானுவேலைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுபோதையில் பெற்ற தாயைக் கட்டையால் அடித்துக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் தாளமுத்து நகர் மற்றும் குமரன் நகர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory