» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுபோதையில் பெற்ற தாயைக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன்: தூத்துக்குடியில் கொடூரம்
வியாழன் 11, ஜூன் 2026 7:40:56 AM (IST)
தூத்துக்குடியில் மதுபோதையில் பெற்ற தாயைத் தலையில் மரக்கட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் எல்லைக்குட்பட்ட குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமீலா மேரி (46). இவருடைய கணவர் சுதாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், ஜமீலா மேரி தனது மகன் இமானுவேலுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இமானுவேலுக்குக் மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜமீலா மேரி ஏற்கனவே நேரிட்ட ஒரு சாலை விபத்தின் காரணமாக, உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மதுபோதைக்கு அடிமையான இமானுவேல், கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை தலைக்கேறிய நிலையில், உடல்நிலை குன்றியிருந்த தனது தாய் ஜமீலா மேரியைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். அத்துடன் நிற்காமல், அவரை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியே தள்ளியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அப்பகுதிப் பொதுமக்கள், இமானுவேலின் இந்த மனிதநேயமற்ற செயலைக் கடுமையாகக் கண்டித்து எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் இமானுவேல் மீண்டும் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், தாய் ஜமீலா மேரிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற இமானுவேல், வீட்டில் இருந்த ஒரு மரக்கட்டையை எடுத்து, படுக்கையில் இருந்த தாய் என்றும் பாராமல் ஜமீலா மேரியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜமீலா மேரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்ட இமானுவேல், உடனடியாகத் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இக்கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் பிரிவினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜமீலா மேரியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தாளமுத்து நகர் போலீசார் குற்றவியல் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், தாயைக் கொன்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடித் தலைமறைவாக உள்ள இமானுவேலைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுபோதையில் பெற்ற தாயைக் கட்டையால் அடித்துக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் தாளமுத்து நகர் மற்றும் குமரன் நகர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான ஆகஸ்டு மாதத்தில் இடைத்தேர்தல்? ஜூலை இறுதியில் அறிவிப்பு
வியாழன் 11, ஜூன் 2026 8:37:05 PM (IST)

மத்திய அரசில் 12,256 பணியிடங்களுக்கு ஜூன் 22-க்குள் விண்ணப்பம்: ஜூன் 17-ல் வகுப்புகள் துவக்கம்!
வியாழன் 11, ஜூன் 2026 5:09:03 PM (IST)

இளம்பெண் மரணம்: ஆணவக் கொலை அல்ல - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம்!
வியாழன் 11, ஜூன் 2026 3:42:03 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் - மதுரை, உவரி - தூத்துக்குடி தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?
வியாழன் 11, ஜூன் 2026 3:24:23 PM (IST)

தூத்துக்குடியில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வியாழன் 11, ஜூன் 2026 3:11:40 PM (IST)

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தவெக எம்.எல்.ஏ பதவி நீக்கம் - உதயநிதி வலியுறுத்தல்!
வியாழன் 11, ஜூன் 2026 12:54:15 PM (IST)


