» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்ரீவைகுண்டம் - மதுரை, உவரி - தூத்துக்குடி தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?

வியாழன் 11, ஜூன் 2026 3:24:23 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் - மதுரை மற்றும் உவரி - தூத்துக்குடி வழித்தடங்களில் நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகளைப் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்கள் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு ஸ்ரீவைகுண்டம் - மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட '153 எக்ஸ்1' என்ற அரசுப் பேருந்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது இப்பேருந்து நிறுத்தப்பட்டதால், நள்ளிரவில் வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தூத்துக்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இப்பகுதி மக்கள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பயணம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

145 எஸ்எஸ் (145 SSS) பேருந்து: உவரியில் இருந்து திசையன்விளை, சாத்தான்குளம், நாசரேத், ஏரல், சாயர்புரம் வழியாகத் தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த திசையன்விளை பணிமனையைச் சேர்ந்த '145 எஸ்எஸ்எஸ்' பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாயர்புரம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் தங்களது தினசரிப் பயணத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கொரோனா காலத்தில் இப்பேருந்துகள் நிறுத்தப்பட்டன; அதனால் இப்போது மீண்டும் இயக்க முடியாது" என்று அவர்கள் பதில் அளிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிறுத்தப்பட்ட தடம் எண் 153 எக்ஸ்1 மற்றும் 145 எஸ்எஸ் ஆகிய பேருந்து சேவைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். இரண்டு பேருந்துகளை இயக்க முடியாத நிலை இருந்தால், ஒரே பேருந்தைக் கொண்டு பின்வரும் மாற்று நேர அட்டவணையில் இயக்கலாம் எனப் பொதுமக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்:

காலை 7:45  மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு சாயர்புரம் வழியாகத் தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டும் (அங்கு காலை 9:15 மணிக்குச் சென்றடையும்). காலை 9:30  மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சாயர்புரம், ஏரல், நாசரேத், சாத்தான்குளம், திசையன்விளை வழியாக உவரிக்குச் செல்ல வேண்டும்.

மதியம் 1:00  மணிக்கு உவரியில் இருந்து புறப்பட்டு அதே வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு வர வேண்டும். மாலை 4:45  மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மதுரைக்குச் செல்ல வேண்டும். நள்ளிரவில், மதுரையில் இருந்து தூத்துக்குடி, சாயர்புரம் வழியாக ஸ்ரீவைகுண்டம் வந்து நிறைவு செய்ய வேண்டும். இந்த முறையில் ஒரே பேருந்தையாகிலும் இயக்கி தங்களின் போக்குவரத்துப் பாதிப்பைத் தீர்க்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory