» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான ஆகஸ்டு மாதத்தில் இடைத்தேர்தல்? ஜூலை இறுதியில் அறிவிப்பு

வியாழன் 11, ஜூன் 2026 8:37:05 PM (IST)

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். அதன்பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதேபோல், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க. அரசுக்கு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்தனர். இதில், மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். 

இந்த நிலையில், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளை காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அந்த நாளில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று விதி உள்ளது.

அதன்படி, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். 

முதல் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய துணை ராணுவத்தினரின் பட்டியலை தேர்தல் ஆணையம் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.  

மேலும், 5 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரிடம் வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த தகவல்களை வரும் 22-ம் தேதிக்குள் அறிக்கையை தயாரித்து அளிக்க வேண்டும் என்றும் 5 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory