» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: பூக்கள் தூவி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!

வியாழன் 4, ஜூன் 2026 10:11:01 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் இன்று காலை தங்களது பள்ளிகளுக்குச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள வி.றி.வி.டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2026-2027 ஆம் கல்வியாண்டின் தொடக்கமாக இன்று (04.06.2026) பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா , மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்,   தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 1352 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 65000 மாணவர்கள் மற்றும் 221 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 1,03,196 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா பாடக்குறிப்பேடுகள், விலையில்லா சீருடைகள், விலையில்லா கணித உபகரணப்பெட்டி, விலையில்லா புத்தகப்பை மற்றும் இதர கல்வி உபகரணப் பொருட்கள் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு இன்றைய தினம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா  மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்,   ஆகியோர் வல்லநாடு வி.றி.வி.டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, இனிப்புகள் மற்றும் ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  சங்கீதா சின்னராணி, திருவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அஹமது, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேளதாளங்கள் முழங்க வரவேற்பு


தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமையில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் நுழைவாயிலில் மங்களகரமான மேளதாளங்கள் முழங்க மாணவ-மாணவிகளின் மீதும் மலர்கள் தூவி வரவேற்றனர். 

மேலும், மாணவர்களின் கல்விப் பயணத்தை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்குத் தேவையான ஸ்கேல், பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த வித்தியாசமான வரவேற்பு முறை மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.


இதற்கிடையில், இன்று பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளானதால், தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் புதிதாகச் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் திரண்டனர். பெற்றோர்கள் மற்றும் வாகனங்களின் அதீத கூட்டத்தினால், தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory