» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!

திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)

திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதலவர் விஜய்யை, மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ நேரில் சந்தித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது வரவேற்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

"முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் திருச்சிக்கு வந்த விஜய் அவர்களை, இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) என்ற முறையில் முறைப்படி வரவேற்றேன். தற்போதைய சூழலில் தொகுதி கோரிக்கைகளை அவரிடம் அளிக்கவில்லை. அடுத்த முறை சந்திக்கும் போது கோரிக்கை மனுக்களை அளிப்பேன்.

மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசின் உதவியும் கண்டிப்பாகத் தேவை. தமிழகத்தின் புதிய அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறேன். புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளதால், நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வர அவர்களுக்குக் குறைந்தது 6 மாத கால அவகாசமாவது தேவைப்படும்.

குற்றங்களை 100 சதவீதம் தடுத்து நிறுத்த முடியாது; அது வளர்ந்த நாடுகளிலும் நடப்பதுதான். ஆனால், குற்றம் நடந்தவுடன் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்வதில் தற்போதைய அரசு தாமதம் காட்டுவதில்லை. தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளைப் புதிய அரசு காலப்போக்கில் நிறைவேற்ற வேண்டும். தற்போதைய சட்டமன்றத்தில் தவெக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரசியலமைப்பின்படி ஆட்சி அமைத்துள்ளது. 

கூட்டணி குறித்து 27-ஆம் தேதி முடிவு:

மக்கள் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். எங்களது (மதிமுக) எம்எல்ஏக்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டதால், இப்போது இவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய சூழல் இல்லை. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இந்த அரசுக்கு ஆதரவளித்துள்ளனர். "வரும் ஜூன் 27-ஆம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில், கூட்டணியில் தொடர்வது குறித்துக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விரிவாகப் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்." என்று துரை வைகோ தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory