» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:36:58 AM (IST)
பெண்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறி அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்.வி.சேகர், சமூக ஒழுக்கம் மற்றும் கலாச்சாரம் குறித்துப் பேசினார். அப்போது பாலியல் குற்றங்கள் குறித்து எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது ஒருவரைத் துணையாக அனுப்ப வேண்டும்" என்று கூறினார்.தொடர்ந்து பேசுகையில், "ஒரு பெண் புதருக்குள் சென்றார் என்கிறார்கள். அவர் ஏன் அங்கு சென்றார்? புதருக்குள் போலீஸாரால் லைட் போட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சாட்டும் வகையில் (Victim Shaming) அமைந்த இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
எஸ்.வி.சேகரின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபாதா, தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டதாவது:"இயற்கை உபாதையைக் கழிக்க அந்தப் பெண் அங்கு சென்றிருக்கலாம். இந்தியாவில் போதிய கழிவறை வசதிகள் இல்லாததால் வெளியே செல்லும் பெண்கள் இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாவது ஒன்றும் புதிதல்ல. பாதுகாப்பாக எங்கு வேண்டுமானாலும் ஆடையின் ஜிப்பை கழற்றி சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால் பெண்களின் இந்தப் பாதிப்பைப் புரிந்துகொள்ள முடியாது."
சின்மயியின் இந்த நேரடியான பதிலுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது கண்டிக்கத்தக்கது எனப் பதிவிட்டனர்.
மன்னிப்பு கோரிய எஸ்.வி.சேகர்
எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார். "எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. எனது கருத்துக்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது அவர்களைக் கட்டுப்படுத்துவது அல்ல; மாறாக அவர்களுக்கான பாதுகாப்பான சூழலையும் அடிப்படை வசதிகளையும் (கழிவறை போன்றவை) உருவாக்குவதே அரசின் கடமை எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'பெண் ஏன் அங்கு சென்றார்?' எனக் கேட்பதை விட, 'அவர் சென்ற இடத்தில் ஏன் பாதுகாப்பு இல்லை?' என்பதே சரியான கேள்வியாக இருக்கும் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)

விஜய் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்: 5 கேள்விகளை எழுப்பி பொன்ராஜ் பதிலடி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:09:45 PM (IST)

அண்ணா பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை: அண்ணாமலை கடும் கண்டனம்
வெள்ளி 27, மார்ச் 2026 11:28:05 AM (IST)

தவெக பெண்கள் குறித்து பொன்ராஜ் சர்ச்சை பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 10:37:27 AM (IST)

அம்பை கோயில் கும்பாபிஷேக விழா: நகை பறிக்க முயன்ற 5 பெண்கள் கைது!
வெள்ளி 27, மார்ச் 2026 8:46:14 AM (IST)

