» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்: புதிய தமிழகம் தனித்துப் போட்டி - கிருஷ்ணசாமி அறிவிப்பு!

வெள்ளி 27, மார்ச் 2026 8:43:47 AM (IST)

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது: 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தோம். வரும் தேர்தலில் அதிமுகவிடம் 12 முதல் 15 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் கோரினோம்.

அதிமுக தரப்பில் முதலில் 7 தொகுதிகள் தருவதாகக் கூறி, பின்னர் அதனை 5 ஆகக் குறைத்தனர். எடப்பாடி பழனிசாமியுடன் நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிமுகவால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்து மனவேதனையில் உள்ளனர். எனவே, தற்போதைய சூழலில் அதிமுக உடனான பேச்சுவார்த்தை முற்றுப் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் 70 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனித்துப் போட்டியிடுவதன் மூலம் 10 முதல் 12 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இருப்பினும், தாங்கள் கேட்ட தொகுதிகளை மீண்டும் ஒதுக்க முன்வந்தால், தனித்துப் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும்  டாக்டர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory