» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

புதன் 11, பிப்ரவரி 2026 11:46:32 AM (IST)



திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை என்றும், ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற 'இந்தியா டுடே' மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், அரசியல் சூழல் மற்றும் தேர்தல் களம் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

2021 சட்டமன்றத் தேர்தலை விட வரவிருக்கும் தேர்தல் எங்களுக்குக் கடினமானதாக இருக்காது. கடந்த காலங்களில் எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளோம். வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி, செய்த நன்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்போம். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு வளம் பெறும் என மக்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பல்வேறு நன்மைகளைச் செய்து வரும் வேளையில், மத்திய அரசு பல நெருக்கடிகளைக் கொடுத்து துரோகத்தையும் அநீதியையும் இழைத்து வருகிறது. தமிழக அரசின் 'தோழி' விடுதி போன்ற முன்னோடித் திட்டங்களை மத்திய அரசு இன்று பின்பற்றி வருகிறது. எங்களின் வளர்ச்சியை மத்திய அரசால் மறைக்க முடியவில்லை. ஊழல் கூட்டணியின் பெயர்தான் 'டபுள் என்ஜின்' கூட்டணி. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது 'ஜீரோ'; எனவே தேர்தலில் அவர்களுக்குக் கிடைக்கப்போவதும் 'ஜீரோ' தான்.

"திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இருப்பதாகத் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இது ஒருபோதும் நடக்காது. இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான உறவு உள்ளது. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒத்து வராது என்பது காங்கிரஸுக்கும் நன்றாகத் தெரியும். கூட்டணியை முறிப்பதற்காகச் சிலர் கிளப்பிவிடும் 'ஆட்சியில் பங்கு' என்ற வதந்திகள் எடுபடாது," என முதலமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தி குறித்துப் பேசுகையில், "அரசியலைத் தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராகவே பார்க்கிறேன்; அவரும் அப்படியே கருதுகிறார். கலைஞர் கூறியது போல 'உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கை கொடுப்போம்' என்ற கொள்கைப்படி காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கும்," என்றார்.

தன்னுடைய சுறுசுறுப்பிற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, "அரசியலில் களம் புகுந்தது முதல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். என் தந்தை கலைஞர் கருணாநிதியிடம் நான் கற்றுக்கொண்ட ஒரே மந்திரம் 'உழைப்பு'. அதையேதான் தற்போது உதயநிதிக்கும் சொல்லி வருகிறேன்," என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory