» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப் பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.

அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கிடையே, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வக்கீல் ஜெகநாத் என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, "அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. புகார் இல்லாமலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் பொன்முடி மீதான ஒரு புகார் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நான்கைந்து வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்துப் போய்விடும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory