» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழில் பாடங்கள் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித் துறை திட்டம்!

வியாழன் 10, ஏப்ரல் 2025 10:58:45 AM (IST)

தமிழ் பாடத்தில், மாணவர்கள் தோல்வி அடைவதை தவிர்க்க, பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை, கடந்த, 2017ல் வடிவமைத்த பாடப்புத்தகங்கள்தான், தற்போது வரை நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், தமிழ் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைவது அதிகரிப்பதால், வரும் கல்வியாண்டு முதல், பாடங்களின் அளவை குறைக்கும் நடவடிக்கையில், பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டு உள்ளது.

தமிழக அரசின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்தான் பாடத்திட்டத்தை வடிவமைக்கிறது. இதற்காக பாடத்திட்ட வடிவமைப்பு குழு அமைக்கப்படுகிறது. அதன் பரிந்துரை அடிப்படையில், பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பாடங்களை குறைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் மாநில பாடத்திட்ட பாடங்களின் பல பகுதிகளில் இருந்து, நீட் உள்ளிட்ட தேசிய தேர்வுகளில், வினாக்கள் இடம்பெறுவதில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதிகளை படிப்பதைவிட, கேள்விகள் இடம்பெறும் பகுதிகளை, அறிவியல் பாடத்தில் சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதேநேரம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு, பாட வேளைகள் அதிகமாகவும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு, பாட வேளைகள் குறைவாகவும் உள்ளன. இதனால், அதிக பாடங்களை, குறைந்த பாட வேளைகளில் எடுக்க முடியவில்லை என மொழி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தனியார் பள்ளிகளில், ஆறு நாட்கள் வேலை நாட்களாக உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளி செயல்படுகிறது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள், தமிழ், ஆங்கில வாசிப்பில் மிகவும் பின் தங்கியுள்ளதால், அவர்கள் அதிகம் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர். இதை பரிசீலித்த அரசு, தற்போது பாடங்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, தமிழ் பாடங்களின் எண்ணிக்கையில் ஒன்றை குறைக்கவும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடங்களில், இரண்டை குறைக்கவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

குறைக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன் தயாராகி விடும். இதேபோல், மற்ற பாடங்களிலும் பகுதிகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory