» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!

திங்கள் 6, ஜூலை 2026 4:01:49 PM (IST)

TiruchendurKovil4i.jpg

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசன மற்றும் சேவைக் கட்டண உயர்வு குறித்துப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கடைசி நாளை ஜூலை 21-ஆம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த பா. இராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: "இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனக் கட்டணம், பூஜைக் கட்டணம் மற்றும் சிறப்புப் பூஜைகள் கட்டண உயர்வு குறித்துத் தக்கார் அல்லது அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உட்படப் பல கோயில்களில் இந்த அறிவிப்பு பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை. இதனால் கட்டண உயர்வு விபரம் பக்தர்களுக்குத் தெரிவதில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் திருச்செந்தூர் கோயிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்படாத சூழ்நிலையில், தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில், பரவலாக பக்தர்களுக்குத் தெரிவிக்காமல் கடந்த ஜூன் 20 அன்று எவ்வித கையெழுத்தும் இன்றி கோயில் அறிவிப்புப் பலகையில் மட்டும் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. எனவே, முறையான அறங்காவலர் குழு தீர்மானம் இல்லாமல் வெளியிடப்பட்ட இந்தக் கட்டண உயர்வு அறிவிப்பு செல்லாது என உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இது குறித்து ஏற்கனவே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், "கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை; கருத்துதான் கேட்கிறோம்" என்று பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இராம்குமார் ஆதித்தன் ஜூன் 25 அன்று வழங்கிய ஆட்சேபனை 27-ஆம் தேதி கிடைக்கப் பெற்றதாகவும், அவர் 28-ஆம் தேதியே வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு தொடர்பான விளம்பரத்தை இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், இக்கட்டண உயர்வு குறித்துப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 7 என இருந்ததை, வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.


மக்கள் கருத்து

மு. குமார்Jul 6, 2026 - 10:45:50 PM | Posted IP 104.2*****

பிறர் மணம் புண்படுத்தக்கூடிய கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிட்டு ஏழை பக்தர்களாகிய எங்களை கட்டண என்ற உயர்வு என்று சொல்லி புண்படுத்திவிட்டீர்கள் ஏழைகள் நாங்கள் தேர்ந்து எடுத்த அரசின் இதுவரை உள்ள செயல்பபாடுகள் எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அழித்தது ஆனால் இதுபோன்ற கட்டண உயர்வு எங்களை மிகவும் புண்படுத்திவிட்டது

மு. குமார்Jul 6, 2026 - 10:37:56 PM | Posted IP 104.2*****

இனி ஏழைகள் யாரும் இந்த கோவிலுக்கு வரக்கூடாது என்பதற்கா இந்த கட்டண உயர்வு தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லும்அரசு சொல்லும் அரசு எதற்காக விஐபி மற்றும் சிறப்பு தரிசனம் என்ற பாகுபாடு அனைவருக்கும் ஒரே கட்டணம் என்ற முறை எந்த அரசு தான் செயல்படுத்தும் செயல்படுத்த போகிறது இதற்கு முன் ஆண்ட அரசியல் வாதிகள் வேண்டாம் என்று உங்களை தேர்ந்தெடுத்தற்கு இந்த கட்டண உயர்வு தண்டனையா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory