» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை: நெல்லை கார் டிரைவர் கைது!

வெள்ளி 8, மே 2026 8:27:18 AM (IST)

கன்னியாகுமரியில் சிங்கப்பூர் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து, நகை மற்றும் பணத்தைச் சுருட்டிச் சென்ற நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி சுவாமிநாதபுரம், பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் பொன்னையா. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு வடக்கன்குளத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்குச் சென்றுள்ளார்.

திருவிழா முடிந்து அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 13 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய் ஆகும்.

இது குறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் காரில் வந்து அந்தப் பகுதியை நோட்டமிடுவது உறுதியானது.

செல்போன் டவர் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (25) என்பவர் இக்கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின: வாடகை கார் டிரைவரான பொன்ராஜ், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

சித்ரா பவுர்ணமி அன்று முத்துலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு, சுமார் 4 மணி நேரம் மறைந்திருந்து கதவை உடைத்து நகை, பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பொன்ராஜைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள பணத்தை அவர் கார் வாங்கியதற்கும், கடனை அடைப்பதற்கும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory