» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசைத் தந்ததில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!

சனி 21, பிப்ரவரி 2026 5:32:49 PM (IST)



"திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசாங்கத்தைத் தந்ததில்லை என்பது தற்போதைய சூழலில் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9-வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட பின், அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : அமைச்சர் கே.என். நேரு மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அவர் சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். 

அல்லது, தமிழக முதல்வர் அவரைத் தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து விடுவித்து, விசாரணை நேர்மையாக நடக்க வழிவகை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பொது வாழ்க்கையில் 'தூய்மை' மற்றும் 'நேர்மை' பேசுவதில் அர்த்தமே இருக்காது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசாங்கத்தைத் தந்ததில்லை என்பது தற்போதைய சூழலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

"செக்யூலரிசம்" என்ற பெயரில் தேசிய அடையாளங்களைச் சிதைக்க முயல்கிறார்கள். ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை, வந்தே மாதரம் போன்ற தேசிய பெருமிதங்களை இழிவுபடுத்தும் சூழல் உருவாகி வருகிறது. இவ்வாறு போனால் தேசிய கீதத்தையே பாட முடியாத நிலை ஏற்படும் என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்துப் பேசுகையில், "தேசிய அடையாளங்கள் தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என்ற மனநிலையில் அவர் உள்ளார். பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், பாஜக கூட்டணியில் இருந்தபோதும் வைகோ ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? அவர் தற்போது இருக்கும் கூட்டணி சரியில்லை; சேரும் இடம் சரியில்லை என்றால் குணமும் மாறும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்," என்று சாடினார்.

எஸ்சி/எஸ்டி (SC/ST) நிதியில் இருந்து 5,000 ரூபாய் பணம் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மற்றும் அதிமுக சுட்டிக்காட்டியுள்ளன. இதற்குத் தமிழக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. இது குறித்து திருமாவளவன் கேள்வி எழுப்ப வேண்டும், போராட வேண்டும். அந்த நிதி எந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டதோ, அதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஓ. பன்னீர்செல்வம் முதிர்ந்த, பண்பட்ட ஒரு தலைவர். தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தவர். அவர் எந்தத் தவறும் செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன். "வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும்?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும்" என்று பொன். ராதாகிருஷ்ணன் உறுதியுடன் பதிலளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory