» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மதமாற்றம்? – இந்து மக்கள் கட்சி சார்பில் முதல்வரிடம் புகார் மனு!

திங்கள் 2, பிப்ரவரி 2026 4:40:59 PM (IST)


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் மருத்துவமனை முதல்வரிடம் (Dean) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம், சில அமைப்புகள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவமனை முதல்வரிடம் அளித்த மனுவில், "நோயாளிகளின் உறவினர்களுக்கு வார்டுகளுக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 

ஆனால், மதமாற்றக் குழுவினரை மட்டும் பாதுகாவலர்களும், சில பணியாளர்களும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு வார்டுகளுக்குள் அனுமதிப்பதாகத் தெரிகிறது. ஸ்ட்ரெச்சர் தள்ளுவது முதல் சிறிய பணிகளுக்குக் கூட நோயாளிகளிடம் பணம் வசூலிக்கப்படும் நிலையில், இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. மருத்துவமனை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மதப்பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனை முதல்வர், இந்தப் புகார் குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி எச்சரிக்கைப் பதாகைகள் வைக்கப்படும். விதிகளை மீறி மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால், அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்தகுமார், மாநிலத் துணைத் தலைவர் ராமகுணசீலன், மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி, நைனா மற்றும் நிர்வாகிகள் இராஜவேல், சிம்பு கண்ணன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

இம்மானுவேல் குணசிங்Feb 3, 2026 - 01:03:16 PM | Posted IP 172.7*****

தானாக மதம் மாறாமல் வலுக்கட்டாயமாக தங்கள் மதத்துக்கு மாற்றுவது கண்டிக்கத்தக்கது ஆனால் என்றைக்காவது அரசு மருத்துவமனையில் அனாதையாக ஆதரவு இல்லாமல் சிகிச்சை பெற்று வரும் ஒரு நபருக்காவது ஒரு ரொட்டித் துண்டு வாங்கி கொடுத்து அவர்களை நலம் விசாரித்து இருப்பார்களா? இந்த இந்து மக்கள் முன்னணியினர் என்பதை கூறவும் இதையெல்லாம் செய்துவிட்டு இந்த மனுவை கொடுத்திருந்தால் அவர்களுக்கு எனது ராயல் சல்யூட் எதையுமே செய்ய மாட்டேன் போய் விசாரித்து அவனுக்காக பிரார்த்தனை செய்கிறவனையும் அவனுக்கு உதவி செய்கிறவனையும் விட மாட்டேன் என்றால் நீங்கள் செய்வது எந்த விதத்தில் நியாயம் ஒன்று நீ செய் இல்லை மற்றவனை செய்ய விடு. மருத்துவ மனதில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏதாவது ஒரு நோயாளி இதைக் குறித்து அரசினிடமோ அல்லது காவல்துறையினரிடமோ கூறியதாக எங்காவது பதிவு இருக்கிறதா அவர்கள் இதைக் குறித்து புகார் மனு கொடுத்திருந்தால் வரவேற்கத்தக்கது இவர்கள் தங்கள் சுயநல லாபத்திற்காக அனைத்தையும் செய்கிறார்கள் என்பது நிதர்சனம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory