» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!

சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)



அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (டிச.14) புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியங்காடு அரசு ஆரம்ப பள்ளி மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (13.12.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம், 2026 ஆனது 01.01.2026-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளார்கள். மேற்படி வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு மின்னணுமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் இருப்பிடத்தில் வசிக்காதவர் / நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் / இருமுறை இடம் பெற்றவர்கள் / இறந்தவர்கள் (Absent/Shifted/Duplicate/Death) இனங்கள் குறித்து 100% ஆய்வு செய்யப்பட்டு அதில் 1,53,401 நபர்கள் ASD பட்டியலில் இடம்பெறுகின்றனர். 

மேலும், 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத வாக்காளர்கள், புதிதாக திருமணமாகி இடம்பெயர்ந்தவர்கள்/நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட சிறப்பு முகாம் இன்று (13.12.2025 சனிக்கிழமை) மற்றும் 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும். மேற்படி முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நிலை-2 (BLA-2) கலந்துகொண்டு படிவங்களை பூர்த்தி செய்ய உதவுவார்கள்.

அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியங்காடு அரசு ஆரம்ப பள்ளி மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனவே, இம்முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-னை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திடுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.

ஆய்வில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory