» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்: 30 பேருக்கு பணி ஆணைகள்!

சனி 30, ஆகஸ்ட் 2025 3:54:19 PM (IST)



குமரி மாவட்டத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா வழங்கினார்..

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன், மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அஸ்கார்டியா நிறுவனம் இணைந்து இன்று (30.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா, கலந்து கொண்டு, பணி ஆணைகள் வழங்கி பேசியதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன், மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அஸ்கார்டியா நிறுவனம் இணைந்து மாதந்தோறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 

இதில் 6037 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். 2868 வேலை நாடுநர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற முகாமில் சென்னையை சார்ந்த 2 நிறுவனங்களும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 7 நிறுவனங்களும் கலந்து கொண்டன. மேலும் இந்த முகாமில் சுமார் 180 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டு தேர்வுச் செய்யப் பட்ட 30 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி கற்ற மாணவர்களுக்கு சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். அதற்கான சிறப்பு முயற்சியாக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணி ஆணைகள் பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன். மேலும் மற்றவர்கள் தொடர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். 

மாணவர்களுக்கிடையே மேலும் பல திறன்களை வளர்த்தெடுக்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் பல திறன் மேம்பாட்டு வகுப்புகளை உடனடியாக நடத்த வேண்டும். பணி ஆணை என்பது முடிவு அல்ல. துவக்கமே. இதனை ஆதாரமாக எடுத்து வளமான எதிர் காலத்தினை உருவாக்குவதே உங்கள் சாதனையாக இருக்கும். தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுவரும் திறன்மேம்பாட்டு பயிற்சி மேற்கொண்டு வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.. 

முகாமில் மாவட்ட திறன் அலுவலக உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர் ஜிஜின் துரை, மற்றும் நிறுவனங்களைச் சார்ந்த மனித வள அலுவலர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் கலந்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory