» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரதமரின் திருவனந்தபுரம் நிகழ்ச்சியில் புதிய ரயில்கள் அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கும் குமரி?
வெள்ளி 2, மே 2025 12:53:00 PM (IST)
பிரதமரின் திருவனந்தபுரம் நிகழ்ச்சியில் புதிய ரயில்கள் அறிவிப்புகள் வெளியாகுமா என்று குமரி மாவட்ட பயணிகள எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞம் துறைமுகம் பரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை 02-05-2025 அன்று திருவனந்தபுரத்தில் வைத்து திறந்து வைக்கிறார். பிரதமர் அவர்களின் இந்த விழாவின் போது கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் புதிய ரயில்கள் நீட்டிப்பு வரும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த முறை ராமேஸ்வரம் வருகை தந்த பரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரிக்கு ஒரு ரயிலையாவது அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
பொதுவாக பிரதமர், முதவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இந்த பகுதியில் ஏதேனும் நீண்டகாலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் உள்ளனவா என்று கேட்டறிந்து ஆலோசனை நடத்தி இது போன்ற திட்டங்களை அறிவிப்பார்கள். இது மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதன்மை விருந்தினர்கள் பேசுவதற்கு முன்பாக முதன்மை விருந்தினர் மேடையில் வைத்து பஞ்சாயத்து தலைவர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மாநில மந்திரிகள், மத்திய மந்திரிகள் உரையாற்றுவார்கள்.
இது போன்ற உரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை மேடையில் வைத்து சமர்ப்பித்து மேடையில் பேசுவார்கள். இது போன்ற கோரிக்கைகள் கேட்டறிந்த முதன்மை விருந்தினர் குறிப்பாக பிரதமர் அல்லது முதல்வர் கடைசியாக பேசும் போது நீண்டகாலமாக தீர்க்கப்படாத இந்த கோரிக்கைகளை மேடையில் அறிவிப்பார்கள். இது இந்த பகுதி மக்களுக்கு தீர்வாக அமையும்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சுமார் 20 லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் அதிக கல்வியறிவு நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு அரசு, அரசு சார்ந்த அல்லது தனியார் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் இங்கு உள்ள மக்கள் வெளி ஊர்களில் வேலை பார்ப்பது என்பது இந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் தவிர்க்க முடியாத நிலை ஆகும். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரயில் வசதி என்பது மிகவும் அத்தியாவசியமான கோரிக்கை ஆகும்.
புதிய ரயில்கள் விடுதல் போன்ற பல்வேறு ரயில்வே வளர்ச்சி பணிகள் என்பது இந்த மாவட்டத்தின் மொத்த வளர்சியாக கருதப்படுகிறது. இந்தியாவின் கடைசி எல்லையான குமரியிலிருந்து ஓர் ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில்தான் தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கு நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது.
குமரி மாவட்ட மக்களுக்கு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் சுமார் 70 கி.மீ அருகில் இருந்தாலும் 750 கி.மீ தூரம் கொண்ட சென்னை தான் தங்கள் மாநிலத்தின் தலைநகர் ஆகும். ஆதலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தான் அதிக ரயில்கள் இயக்க வேண்டும்.
1. சென்னை ரயில்களை குமரி வரை நீட்டிப்பு:
தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்புபாதைகள் இருவழிபாதை பணிகள் முடிந்து விட்டது. ஆகவே சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ரயில்களை தமிழ்நாட்டின் தெற்கே உள்ள கடைசி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
இதற்காக முதல் முயற்சியாக தாம்பரம் - ஐதரதபாத் சார்மினார் தினசரி ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களையும் திருச்சி மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த இரண்டு ரயில்களில் தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் தினசரி ரயில் கன்னியாகுமரி நீட்டிப்பு ரயில்வே வாரியத்தில் கிடப்பில் உள்ளது.
2. நாகர்கோவில் - தாம்பரம் தினசரி ரயிலாக மாற்றம்:
தென்மாவட்ட பயணிகள் தற்போது இயக்கப்படும் ரயில்களில் சென்னை சென்று வர செல்ல முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் வாரம் மூன்று முறை ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளும் கடந்த 2019-ம் ஆண்டு ரயில்கால அட்டவணை மாநாட்டில் விவாதிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
3. குமரி - மங்களூர் இரவு நேர ரயில் வரை இயக்க கோரிக்கை
கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களூர் 16347-16348 இரவு நேர ரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரயில் நீட்டிப்பு திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. மதுரை – புனலூர் ரயிலை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை (வழி திருச்சி)
அனைத்து சமய மக்களுக்கு அதிக அளவில் புனித பயணம் செல்லும் வேளாங்கண்ணி, திருநள்ளாறு, நாகூர் ஆண்டவர் தர்கா ஆகிய இடங்களுக்கு செல்ல திருவனந்தபுரம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்திலிருந்து அதிகப்படியான பக்தர்கள் தரிசிக்க தினசரி செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தற்போது இயக்கப்பட்டு வருட் மதுரை – புனலூர் தினசரி ரயிலை திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
கன்னியாகுமரி – பாரமுல்லா தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில்:
காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவில் துவங்கி உதம்பூர், கட்ரா , ஸ்ரீநகர், காசிகுண்ட் வழியாக பாராமுல்லா பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை பாதை இருவழி பாதை பணிகள் முடிவு பெற்றுவிட்டன
இந்தியாவின் தெற்கே உள்ள கடைசி ரயில் நிலையமான கன்னியாகுமரியிலிருந்து வடக்கே கடைசி ரயில் நிலையமாக பாலா முல்லாவுக்கு தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். கன்னியாகுமரியிலிருந்து பாரமுல்லாவுக்கு இந்த திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா பாதை வழியாக தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 3, மே 2025 8:31:59 AM (IST)

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு
வெள்ளி 2, மே 2025 3:52:00 PM (IST)
