» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா!

வியாழன் 9, ஜூலை 2026 4:44:33 PM (IST)

AustraliStatuModi.jpg

தமிழகக் கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலத் திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி அம்மன் சிலை, நந்தி சிலை மற்றும் கார்த்திகேயன் சிலை ஆகியவற்றை இந்தியத் தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலிய அரசு ஒப்படைக்க உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அந்தோணி அல்பானீசை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். இந்த உயர்மட்டச் சந்திப்பில், தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட பழங்காலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடமே முறைப்படி ஒப்படைப்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்படும் சிலைகளின் தொல்லியல் விபரங்கள்:

பத்ரகாளி அம்மன் திரிசூலம்:    சக்தியின் உக்கிர வடிவமான பத்ரகாளி அம்மன் உருவம் கொண்ட இந்த உலோகத் திரிசூலம், தென்னிந்தியக் கோவில் வழிபாட்டிற்காக வடிவமைக்கப்பட்டதாகும். சைவ சக்தி மரபுகளில் பாதுகாப்பு, தீமையை அழித்தல், தெய்வீக ஆற்றல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் இச்சிற்பமானது, தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலைச் சேர்ந்ததாகும். இக்கோவில் கிபி 13 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான பிற்காலச் சோழர் காலம் முதல் விஜயநகர நாயக்கர் காலம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும்.

நந்தி கற்சிலை:    தமிழ் சைவக் கோவில் மரபில் நேர்த்தியான அலங்கார வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ள இந்த நந்தி கற்சிலையும், திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமானதாகும். சிவனின் வாகனமான நந்தியை இச்சிலை பிரதிபலிக்கிறது.

ஆறுமுக கார்த்திகேயன் கற்சிலை:    ஞானம், வீரம், தெய்வீகப் பாதுகாப்பைப் பறைசாற்றும் வகையில் ஆறு தலைகளுடன் செதுக்கப்பட்டுள்ள இந்த கார்த்திகேயன் கற்சிலை, தமிழகத்தின் மானம்பாடி நாகநாதசாமி கோவிலைச் சேர்ந்ததாகும். நேர்த்தியான நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற சோழர் காலத்தில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலானது கிபி 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகழ்பெற்ற ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory