» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்

புதன் 12, ஜூன் 2024 4:07:13 PM (IST)



மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் 9ம் தேதி டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். மோடியை தொடர்ந்து, அவரது தலைமையில் மத்திய மந்திரிகள் மற்றும் மத்திய இணை மந்திரிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

நேற்று முன்தினம் (10ம் தேதி) புதிய அமைச்சரவை முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. நிதி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 4 முக்கிய துறைகளை பா.ஜ.க. தன்னிடமே வைத்து கொண்டுள்ளது. உள்துறை அமைச்சராக அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங்கும், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கரும் மீண்டும் பொறுப்பேற்று கொண்டனர்.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றார். அலுவலகம் வந்த அவரை நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இவருடன் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் உடனிருந்தார். நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தனது ஏழாவது பட்ஜெட்டையும், ஆறாவது முழு பட்ஜெட்டையும் தொடர்ச்சியாக தாக்கல் செய்ய உள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 18வது மக்களவையில் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்ற போது மத்திய அமைச்சராக அவரது அரசியல் பயணம் தொடங்கியது. 2014 அமைச்சரவையில், அவர் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணை அமைச்சராக தனிப்பொறுப்புடனும் பின்னர் 2017ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2019-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மேலும் அவர் தொடர்ச்சியாக ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory