» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயார்: முதலமைச்சர் விஜய்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 10:42:14 AM (IST)

"காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்; தமிழக மக்களுக்காக எந்தவொரு அவமானத்தையும் தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்" என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: "தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத வேகத்தில் செயல்பட்டு வருகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக்கூடத் தமிழ்நாடு அரசு மறுக்கிறது" எனக் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றியதாவது: "காவிரி நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்குச் சிறிதும் இல்லை. மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரிப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கோரிக்கை வைத்ததே நான்தான்.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் தீர்மானத்தை நிறைவேற்றினோம். மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் பதிலுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன்.
காவிரி விவகாரத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்திற்காகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். 'பெங்களூரு சென்று கர்நாடக முதல்வருடன் பேசிப் பார்ப்போமே' என்றுதான் நினைத்தேன். உலகளவில் பகை நாடுகளே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றன.
பக்கத்து மாநிலத்துடன் பேசிப் பார்க்கலாம் என்று நான் முடிவெடுத்தபோது, 'பெங்களூரு சென்றால் அங்கு ஏதேனும் அவமானம் நடந்தால் என்ன செய்வது?' எனக் கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள நான் தயார்!" எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருத்தணியில் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்: போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:09:11 PM (IST)

விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத முதல்-அமைச்சர் விஜய்... விசாரணை ஒத்திவைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:58:25 AM (IST)

மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:03:58 AM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் - அவரது மனைவி கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:11:26 AM (IST)

மதுரை - தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டம் : ரூ.2.51 கோடி ஆலோசனைக் குழு டெண்டர் வெளியீடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 9:23:56 PM (IST)


