» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2031-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை உறுதி!

திங்கள் 13, ஜூலை 2026 11:53:56 AM (IST)

AnnamalaiWtL.jpg

2031 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், அப்போது  ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அண்ணாமலை உறுதியளித்தார். 

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இம் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

மாநாட்டின் தலைமை வழிகாட்டியான அண்ணாமலை உரையாற்றுகையில், 'வீ த லீடர்ஸ்' அமைப்பு விரைவில் முறையான அரசியல் கட்சியாக மாறும் என்றும், அதற்கான சரியான நேரம், தலைமை மற்றும் எண்ணிக்கை வரும்போது அது நிகழும் என்றும் அறிவித்தார். மேலும், 2031 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், அப்போது தங்களது இயக்கம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் உறுதியளித்தார். தற்போது தொடங்கப்பட்ட 38 நாட்களில் 19 லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும்போது ஒரு நல்ல சமூகம் உருவாகும் எனத் தெரிவித்தார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு முழுமையாகச் சமூகப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க 50 லட்சம் மரக்கன்றுகளை நடுதல், செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு, அக்டோபர் மாதம் குழந்தைகள் நலன் உள்ளிட்ட ஆறு முக்கியப் பிரச்சினைகளை எடுத்துத் தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைப்பில் 17 சதவீதம் மகளிர் உள்ள நிலையில், அவர்களின் பங்களிப்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

2026 ஆம் ஆண்டு 1 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த தவெக அரசுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, புதிய அரசில் உள்ள அமைச்சர்கள் பெரும்பாலானோர் முதல் முறையாகப் பதவியேற்றவர்கள் என்பதால் தொடக்கத் தடுமாற்றங்கள் இருக்கவே செய்யும் என்றார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபர் மீதும் 4 லட்சம்த்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கும் என்றும் விமர்சித்தார். 

ஜாதி மற்றும் மத அடையாளங்களை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டுத்தான் பொதுவெளிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உண்மையான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, விவசாயத்தில் எழுச்சி, பண்பாட்டு மீட்பு, அரசியல் புரட்சி ஆகியவையே தங்களது முதன்மை இலக்கு என்றார்.

மாநாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை 'வெள்ளை பட்டை மாதமாக' கடைப்பிடிப்பது, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்களை உருவாக்குவது, காலை நேர மது விற்பனை மற்றும் கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது, புதிய எஃப்.எல் 2 (FL 2) மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory