» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யூடியூபர் முக்தார் விவகாரம் : அதிமுக கூட்டணிக்கு ஆதரவு - நாடார் சங்கம் அறிவிப்பு!

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:52:35 AM (IST)

காமராஜர் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் 'யூடியூபர்' முக்தார் அகமது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காததால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "2021 முதல் 2026 வரை நடைபெற்ற மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உழைப்பால் உயர்ந்த நாடார் சமுதாயத்தைப் பற்றியும், கல்வி கண் திறந்த காமராஜர் பற்றியும் எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க.வினர் அவதூறுகளையும், பொய் செய்திகளையும் பேசியும், பதிவும் செய்து வந்தனர். தி.மு.க. அரசு கள்ளுக்கான தடையை நீக்கவில்லை. மாறாக தமிழ்நாடு முழுவதும் கருப்பட்டி, கல்கண்டு, பதநீர் விற்பனை செய்து வரும் பனை தொழிலாளர்கள் மீது சட்டவிரோதமாக போலீசார் மூலம் பொய் வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் குறித்து அவதூறு பரப்பிய 'யூடியூபர்' முக்தார் அகமது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ஒட்டுமொத்த நாடார்களும், காமராஜரின் தொண்டர்களும் தொடர்ந்து போராடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி திராவிட மாடல் ஆட்சி நாடார் விரோத ஆட்சியாக மாறிவிட்டது. தி.மு.க. நாடார்களுக்கு 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கலாம். எனவே அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை 234 தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என்று உறுதி ஏற்கிறோம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் என்று போற்றப்படும் காமராஜரை பற்றி அவதூறாக பேசிய யூடியூபர் முக்தார் அகமதுவை கண்டித்து நாடார் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்பார்ட்டம் நடத்தினார்கள். இதுபற்றி அவர்கள் கூறும் போது, நாட்டு மக்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி கொடுத்தவர் காமராஜர். 

அவரை பற்றி யூடியூபர் முக்தார் அகமது அவதூறாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் அதிகமாக வரி கொடுக்கும் வணிகர்களை கள்ள நோட்டு அடிப்பவர்கள் என அவமானப்படுத்தும் நோக்கத்தில் முக்தார் தவறாக பேசி வருகிறார். அவர் மீது உடனடியாக தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..

அதேநேரம் முன்னதாக இந்த பிரச்சனை தீவிரமான போது, யூடியூபர் முக்தார் அகமது மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் வெளியிட்ட பதிவில், காமராஜர் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் முக்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப்பதிவில், ''வணக்கம். என்னுடைய நேருக்கு நேர் நேர்காணலில் நான் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி வழக்கம் போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அதன் காரணமாக, நான் மதிக்கும் அந்த சமூக மக்கள் வேதனைப் படுவது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.

காமராஜர் ஆட்சி குறித்து சில முக்கிய பிரமுகர்கள் முன் வைத்து வந்து வந்த விமர்சனங்கள் மற்றும் வெவ்வேறு சேனல்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்த கருத்துக்களின் அடிப்படையில், அரசியல் பார்வையில் ஒரு பத்திரிக்கையாளராக என்னுடைய நேர்காணலில் அதை வாசித்து விளக்கம் பெற முயற்சித்தேன். எதுவும் என்னுடைய தனிப்பட்ட விமர்சனங்களோ கருத்தோ அல்ல.

நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கில் பயணிக்கிறவன். ஆகவே என்னுடைய நேர்காணல் மூலமாக குறிப்பிட்ட சமூக மக்களின் உணர்வுகள் புண்பட்டு இருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல, நாம் ஒற்றுமையாக இருப்போம்" இவ்வாறு முக்தார் அகமது கூறியிருந்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory