» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் நாளை ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்: 23-ம் தேதி வாக்குப்பதிவு!

திங்கள் 20, ஏப்ரல் 2026 10:40:19 AM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம், நாளை (ஏப். 21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தேசிய மற்றும் மாநில கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். களத்தில் 4,023 வேட்பாளர்கள் உள்ளனர். 1977-ம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் பெரும்பாலும் இருமுனைப் போட்டியே நிலவி வந்த சூழலில், தற்போதைய தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 295 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் 4.74 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் போலீஸாருக்கு இரண்டு கட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, தற்போது அவர்கள் தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி போன்றோர் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஆதரவு திரட்டி முடித்துள்ளனர்.

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை (ஏப். 23 மாலை 6 மணி) அமைதி நேரம் கடைப்பிடிக்கப்படும். இந்த 48 மணி நேரத்தில்:

நேரடியாகவோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 முதல் 23 வரை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

ஏப்ரல் 23-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி ஏப்ரல் 22-ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும். வாக்குப்பதிவு 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory