» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)

கடந்த 2006-ஆம் ஆண்டு போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த கைதியின் உடலை ரகசியமாக எரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், போதிய சாட்சிகள் இல்லாததால் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மசூது (46). இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி அந்தப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையின் போது மசூது உயிரிழந்ததாகவும், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் போலீசாரே ரகசியமாக எரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மசூதைக் காணவில்லை எனக் கூறி அவரது மனைவி அசனம்மாள் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிசிஐடி (CB-CID) போலீசார் இந்த வழக்கை 11 பிரிவுகளின் கீழ் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மசூது உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதுடன், அப்போது பணியில் இருந்த 13 போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகாருக்குப் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட முக்கிய அதிகாரிகள்:

தற்போது உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 13 பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்:

பிரதாப் சிங் (கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் - ADSP)

ஈஸ்வரன் (சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர்)

சந்திரபால் (துணை கண்காணிப்பாளர் - DSP)

லட்சுமணராஜ் (இன்ஸ்பெக்டர்)

சத்யராஜ் (சப்-இன்ஸ்பெக்டர்)

மற்றும் தலைமை காவலர் ரத்தினசாமி, காவலர்கள் பாஸ்கரன், மைக்கேல், முத்து, ஸ்டீபன், முருகன், மாடசாமி, பரமசிவன் ஆகியோர் விடுதலையாகியுள்ளனர்.

நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory