» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)

அம்பாசமுத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (56), விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் (45) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, ராஜகோபாலின் மருமகளைக் கணேசன் அவதூறாகப் பேசியுள்ளார். இதனை ராஜகோபால் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளால் ராஜகோபாலைச் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற ராஜகோபாலின் மகன் கண்ணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்தக் கொலை குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், இதர குற்றங்களுக்காக 13 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் காளிமுத்து ஆஜரானார்.

இந்த வழக்கில் திறம்படப் புலனாய்வு செய்து, சாட்சிகளைச் சரியாக ஆஜர்படுத்திக் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த அம்பை டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகவேல், முன்னாள் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் ஏட்டு செல்வி ஆகியோரை மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் பாராட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory