» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெட்ரோல் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : டி.ஜி.பி.க்கு விற்பனையாளர்கள் சங்கம் கடிதம்!

ஞாயிறு 15, மார்ச் 2026 10:29:44 AM (IST)

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நிலவும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தவிர்க்கவும் ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகச் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி, தமிழக டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகளாவிய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ள 'செயற்கையான தேவை' காரணமாகப் பெட்ரோல் நிலையங்களில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. பலர் விதிமுறைகளுக்கு மாறாகப் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களில் எரிபொருள் வழங்கக் கோரி ஊழியர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். இது பெட்ரோலியச் சட்டத்தின்படி சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், பெரும் தீ விபத்து அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

கேன்களில் பெட்ரோல் வழங்க மறுக்கும் ஊழியர்களைப் பல இடங்களில் நுகர்வோர் மிரட்டுவதும், உடல் ரீதியாகத் தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுத்து, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு காவலரையாவது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முரளி, எரிபொருள் தட்டுப்பாடு குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 21 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது. இந்தியாவிற்குத் தேவையான எரிபொருளை மத்திய அரசு போதிய அளவில் இருப்பு வைத்துள்ளதுடன், மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

100% விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான 14 முனையங்களிலும் (Terminals) போதுமான இருப்பு உள்ளதால், டீலர்கள் கேட்டவுடன் எரிபொருள் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் தேவையற்ற பதற்றமடைந்து கேன்களில் எரிபொருளை வாங்கிச் சேமிக்க வேண்டாம் என்றும், தங்களுக்குத் தேவையான அளவை மட்டும் வாகனங்களில் நேரடியாக நிரப்பிக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory